|
Mullum Malarum
Review by Ananda Vikatan
Dated 3.9.1978

சினிமா விமர்சனம்
தலைப்பிலேயே
இலக்கிய மணம் கமழ் கிறது. மேலோட்டமாகப் பார்க்கும்போது,
முரட னான அண்ணனையும் பூப்போன்ற தங்கையை யும் 'முள்ளும்
மலரும்' என்ற தலைப்பு குறிப்பிடு வதாகத் தோன்றினாலும்,
முள்ளைப் போன்ற முரட்டு சுபாவம் கொண்ட அண்ணன் கூட, தன்
தங்கைக்காகத் தணிந்து வந்து மலராகிறான் என்ப தையே அது
குறிக் கிறதோ?
தன்மான உணர்வும், தங்கையிடம் தாய்க்கு
நிகரான பாசமும் கொண்ட காளியின் பாத் திரப் படைப்பு தமிழ்த்
திரைக்குப் புதிதல்ல என்றாலும், ரஜினிகாந்த் அதைச்
செய்திருப்பதில் ஓர் அழுத்தத்தையும் ஆழத்தையும் காண்கி றோம்.
சிவாஜி ஏற்று நடித்த அண்ணன் வேடத்தை இப்போது சிவாஜி ராவ் (ரஜினி)
ஏற்றிருக்கிறார். இவரும் சக்கைப் போடு போடு கிறார்.
மேலதிகாரி மீதிருந்த கோபத்தைத் தங்கை
மீது காட்டிவிட்டு பின்னர் மனம் வருந்தி வீடு திரும் பும்
காளியைத் தங்கை சாப்பிடக் கூப்பிடும்போது, ''நான்
வரமாட்டேன், போ!'' என்று குழந்தை போலச் சிணுங்குவதும்,
பிறகு தங்கையிடம், ''நீ என்னை அடிச்சுடுடா'' என்று
கெஞ்சுவதும் அருமை.
எஞ்சினீயர் தன்னை மணந்துகொள் ளக்
கேட்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி -சகோதரனின் கை போனதும்
ஏற்படும் துக்கம் -கடைசியில் அண்ணனிடமே வந்து அடைக்கலம்
புகும் பாசம்... அப்பப்பா! இத்தனையும் கொட்டி நடித்
திருக்கிறார் ஷோபா. அவர் நடிப்பு பற்றி ஒரே வார்த்தை:
ஷோபிக்கிறார்!
சரத்பாபுவுக்குப் பொருத்தமான எஞ்சினீயர்
வேடம். மேல் மட்ட அதிகாரி களுக்கே உரித்தான கொச்சைத்
தமிழில் அவர் பேசுவது எஞ்சினீயர் வேடத்துக்கு ஒரு
கம்பீரத்தைத் தருகிறது.
சரியான சாப்பாட்டுராமி மங்கா! அடைக்கலம்
புகுந்த இடத்தில் அண்ணியாக பிரமோஷன் கிடைக்கிறது 'படாபட்'டுக்கு!
வள்ளியின் வாழ்க்கை கெட்டுவிடக் கூடாதே என்ற அக்கறையில்
கணவனிடமே அவர் நடத்தும் தர்மயுத்தம், ஒரு பட்டிக் காட்டு
அந்நியோன்னியத்தை மிகைப் படுத்தாமல் வெளிப்படுத்துகிறது.
காலை உதயத்தின் அழகு, வானவில்லின்
வர்ணஜாலம், இயற்கையின் எழிற்கோலங்கள் -இவற்றை அற்புதமான
முறையில் படமாக்கியிருக்கிறார் பாலு மகேந்திரா. கண்களில்
ஐஸ் வைத் துக் கொண்டு படம் பார்ப்பது போல, அத்தனை
குளிர்ச்சி!
நான்கே பாடல்கள்தான் என்றாலும், அவற்றை
இனிமை இழையோட இசை அமைத் திருக்கிறார் இளையராஜா. 'ராமன்
ஆண்டாலும்' பாட்டு தொடங்கும் முன்னும், பாட்டின்
மத்தியிலும் போட்டிருக்கும் 'லேலே... லேலே...' கோரஸ்,
காதுகளைக் கட்டித் தழுவி முத்தமிடுகிறது. கிளைமாக்ஸ்
காட்சியில், வெறும் தாள வாத்தியத்தை மட்டும் வைத்துக்
கொண்டு தேவையான 'மூட்' உருவாக்கியிருக்கிறார். அதற்காகவே
தனியாக அவரைப் பாராட்டலாம்.
இதுவரை கதை -வசன கர்த்தாவாக மட்டுமே
இருந்து வந்த மகேந்திரனுக்கு இந்தப் படத்தில் டைரக்ஷன் ஒரு
புதிய பொறுப்பு. வியக்கத்தக்க அளவுக்கு அதில் தன் திறமையை
வெளிக் காட்டியிருக்கிறார். உதாரணத்திற்கு...
எஞ்சினீயரிடம் காளியைப் பற்றி ஒருவர்
கோள்மூட்ட, ஒவ் வொரு வாக்கியத்துக்குப் பிறகும் உண்மை என்ன
என்பது போல, காளியின் நடவடிக்கைகளைக் காட்டுவதைப் பற்றிச்
சொல் வதா...
நீட்டி முழக்கி, பக்கம் பக்கமாக வசனங்களை
எழுதாமல் சொல்ல வேண்டியவற்றைக் கன கச்சித மாகச் சொல்லி,
இறுதிக் காட்சியில் தங்கை அண்ணனிடமே ஓடி வந்து அவனைக்
கட்டிப்பிடித்துக் கதறியழும் கட்டத்தில் ஒரு வரி கூட வசனம்
இல்லாமல் பேனாவை இறுக மூடி வைத்து விட்ட
புத்திசாலித்தனத்தைப் பற்றிச் சொல்வதா...
இனி, அவர் எந்தப்படத்தை இயக்கினாலும், இந்தப் படத்தின்
தரத்தை அவரிடமிருந்து எதிர் பார்ப்பார்கள்!
சொந்தக்
கிராமத்துக்குச் சென்று இளைப்பாறிவிட்டு வந்த திருப்தி,
படம் முடிந்ததும் கிடைக்கிறது. இந்த மலர், தமிழ்த் திரை
யில் எப்போதோ பூக்கும் ஒரு குறிஞ்சி மலர்!
Review by Thina Thanthi
இளமையிலேயே தாய் -
தந்தையரை இழந்த ரஜினி, கழைக் கூத்தாடியாக வாழ்க்கையைத்
தொடங்கி, பின்னர் `டிராலி' டிரைவராக உயர்கிறார்.
அவருடைய ஒரே தங்கை ஷோபா. தங்கை மீது உயிரையே
வைத்திருக்கிறார், ரஜினி.
அந்த ஊருக்கு புதிதாக வரும் என்ஜினீயர் (சரத்பாபு),
கண்டிப்பானவர். அவர், ரஜினியை வேலையை விட்டு நீக்கி
விடுகிறார். இதனால் ஆத்திரம் அடையும் ரஜினி, அளவுக்கு மீறி
குடிக்கிறார். அதனால், விபத்தில் சிக்கி, ஒரு கையை
இழக்கிறார்.
ரஜினியிடம் அடைக்கலம் தேடி வரும் `படாபட்' ஜெயலட்சுமி, அவரை
மணக்கிறார்.
இதற்கிடையே சரத்பாபுவுக்கும், ஷோபாவுக்கும் காதல்
ஏற்படுகிறது. சரத்பாபுவை தன் எதிரியாக நினைக்கும் ரஜினி,
இந்தக் காதலை ஏற்கவில்லை. வேறு மாப்பிள்ளையை
தேர்ந்தெடுக்கிறார்.
திருப்பம்
அண்ணன் மீது அளவற்ற பாசம் கொண்டிருந்தாலும், சரத்பாபுவை
மணக்க தீர்மானிக்கிறார், ஷோபா.
சரத்பாபுவுக்கும், ஷோபாவுக்கும் ஒரு கோவிலில் திருமணம்
நடைபெற இருக்கிறது.
கல்யாணத்துக்கு சில நிமிடங்களே இருக்கும்போது, ஷோபா மனம்
மாறி ரஜினியிடம் ஓடி வருவார். "அண்ணா! நீதான் எனக்கு
வேண்டுமë'' என்று கதறுவார்.
தங்கை தன் மீது கொண்டிருக்கும் ஆழமான பாசத்தைக் கண்டு
நெகிழ்ந்து போவார், ரஜினி.
சரத்பாபுவுக்கும், ஷோபாவுக்கும் திருமணத்தை நடத்தி வைப்பார்.
அற்புத நடிப்பு
இந்தப்படத்தில் ரஜினியின் நடிப்பு அற்புதமாக அமைந்தது. "சூப்பர்
ஸ்டார்'' பட்டத்துக்கு ஏற்ப, காளி என்ற கதாபாத்திரமாக
வாழ்ந்து காட்டினார்.
ஷோபாவின் நடிப்பும் மிகச்சிறப்பாக அமைந்தது.
சரத்பாபு, `படாபட்' ஜெயலட்சுமி ஆகியோரும், பாத்திரத்தை
உணர்ந்து நடித்தனர்.
பாலசந்தர் பாராட்டு
"முள்ளும் மலரும்'' படத்தில் ரஜினியின் நடிப்பைப் பார்த்த
டைரக்டர் பாலசந்தர் பிரமித்துப்போனார்.
உடனடியாக ரஜினிக்கு பாராட்டுக் கடிதம் எழுதினார்.
அக்கடிதத்தை ஒரு பொக்கிஷமாக இன்றும் பாதுகாத்து வருகிறார்,
ரஜினி.

மகத்தான வெற்றி
மகேந்திரன், ஏற்கனவே சிவாஜியின் "தங்கப்பதக்கம்''
படத்துக்கு வசனம் எழுதியிருந்தாலும், டைரக்ட் செய்த முதல்
படம் "முள்ளும்
மலரும்.''இந்தப்படம், தரத்தில் மிக உயர்ந்ததாக விளங்கியது.
வெள்ளி விழாப் படமாகவும் அமைந்தது.
இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா. படப்பிடிப்பு,
மேல்நாட்டுப்படங்களுக்கு இணையாக விளங்கியது.
இசை அமைத்தவர் இளையராஜா. கண்ணதாசன், பஞ்சு அருணாசலம், கங்கை
அமரன் ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர்.
"செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்'', "நித்தம் நித்தம்
நெல்லுச்சோறு'', "ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்....''
உள்பட எல்லாப் பாடல்களும் இனிமையாக ஒலித்தன.
"முள்ளும் மலரும்'', பல பரிசுகளை வென்றது. "காலத்தால்
அழிக்க முடியாத காவியம்'' என்று ரசிகர்களாலும்,
விமர்சகர்களாலும் போற்றப்படும் படங்களில் ஒன்று "முள்ளும்
மலரும்.''
|