|
Superstar Rajini & His Fans Q&A Session - 2008
5 November 2008
இதுதான்
நம் அன்புத் தலைவர், தொண்டர்களாக மாறத் துடித்துக்
கொண்டிருக்கும் ரசிகர்களுக்குச் சொல்லும் புதிய கீதை!
ஆம், இன்று தலைவர் தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளை
மாவட்டவாரியாக சந்தித்தார்.
காலை 7 மணியிலிருந்தே ராகவேந்திரா கல்யாண மண்டபம், பத்துக்
கல்யாணங்களை ஒன்றாகச் செய்யும்போது ஏற்படும்
அமர்க்களத்துடன் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது.
கடுமையான போலீஸ் பாதுகாப்பு, தளபதி சத்தி மற்றும் தலைமை
மன்ற நிர்வாகிகளின் சோதனைகளுக்குப் பிறகே, ஒவ்வொரு ரசிகர்
மன்ற நிர்வாகியும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

மாவட்டத்துக்கு 10 நிர்வாகிகள் வீதம் மண்டபத்துக்குள்
அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அனைவரும் பிரதான மண்டபத்தில்
அமர வைக்கப்பட்டனர். ஒவ்வொரு மாவட்ட வாரியாக தளபதி
சத்தியநாராயணா, நிர்வாகிகளை அழைத்து தலைவருக்கு அறிமுகம்
செய்து வைக்க, அவர்களுடன் ரஜினி உரையாடுவதாக ஏற்பாடு.
சந்திப்பு நடைபெறும் மேடையில் ஒரே ஒரு நாற்காலி. அதன்
பின்னணியில் ஒரு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில்
எழுதப்பட்டுள்ள வாக்கியம்தான் இந்த சந்திப்பின் ஹைலைட்.
தலைவர் ரஜினி சொல்ல வரும் ஒட்டுமொத்த செய்திக்கும் சேர்த்து
சொல்லப்பட்டிருக்கும் ஒரு வாக்கியம் அந்த பேனரில் இடம்
பெற்றுள்ளது.
கடமையைச் செய்; பலனை எதிர் பார்! இதுதான் அந்த வாக்கியம்.
அருகில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மஹாவதார் பாபாஜியின் படம்.
சும்மா அதிருதுல்ல!
ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து வந்த ரசிகர்களும் கேள்விகேட்க
அனுமதிக்கப்பட்டனர்.
தங்கள் கேள்விகளை அவர்கள் பதில்களாக எழுதி சுதாகரிடம் தர,
அவற்றுக்கு நிதானமாக அழுத்தம் திருத்தமாக தன் பதில்களைத்
தந்தார் சூப்பர் ஸ்டார்.
தன்னை விமர்சிக்கும் கேள்விக்கும் நிதானமாக சிரித்தபடி அவர்
பதில் கூறிய விதம் தலைவரின் தலைமைப் பண்பை வெளிச்சம் போட்டுக்
காட்டியது.
அரசியல்
பற்றிய கேள்விக்கு ரஜினியின் பதில் நச்சென்று இருந்தது.
உண்மையில் இன்று நாட்டுக்குத் தேவை இப்படியொரு மாமனிதர்தான்
என்ற எண்ணத்தை ஒவ்வொரு ரசிகர் மனதிலும் ஏற்படுத்தும் வகையில்
அமைந்திருந்தன தலைவரின் பதில்கள்.
இனி ரஜினியிடம் ரசிகர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர்
அளித்த பதில்களும்:
கேள்வி: இந்த சந்திப்பின்
நோக்கம் என்ன?
ரஜினி: நீங்கள் என்னை சந்திக்க வேண்டும் என்று
ஆசைப்பட்டீர்கள். அதேப்போன்று நானும் உங்களை சந்திக்க
வேண்டும் என்று ஆசைப் பட்டேன். இதுதான் நோக்கம்.
என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று 300,
400 பேர் என கும்பலாக வருவதால், என்னால் எதுவும் செய்ய முடிய
வில்லை. ஒருமுறை சச்சிதானந்த சுவாமிகள் தன்னுடைய
சிஷ்யர்களிடம் பேசும்போது உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை
கேளுங்கள் அதற்கு பதில் அளிக்கிறேன் என்றார். அதுதான் இப்போது
நடக்கிறது.
கே: ரஜினி ரசிகர்களுக்கு என
ஒரு அங்கீகாரம் கிடைக்குமா?
ரஜினி: சமூகத்தில் உங்களுக்கு என்று ஒரு அங்கீகாரம்
கிடைக்கும்படி செய்வேன்.
கே: எதிர்காலம் திட்டம்
என்ன?
ரஜினி: முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்கள். என்னுடைய
எதிர்காலத்திட்டம் தற்போதைக்கு எந்திரன் படம்தான்.
கே: மன்ற நிர்வாகிகள் மூலம்
நலத்திட்ட உதவிகள் செய்யப்படுமா?
ரஜினி: பணம், ஜனம் இரண்டையும் ஒன்று சேர்க்கக் கூடாது.
சேர்ந்தால் அங்கு அரசியல் வந்துவிடும். என்னிடம் பணத்தை
எதிர்பார்க்காதீர்கள். உங்களால் இயன்றதை நீங்களே செய்யுங்கள்.
நான் தனியாக உதவிகள் செய்துகொண்டே தான் இருக்கிறேன்.
'கிருஷ்ணகிரி தமிழன்'
ரஜினி!
கேள்வி: எந்திரன் படம் எப்படி இருக்கும்?
பதில்: உலகின் மிகச் சிறந்த படங்களுள் ஒன்றாக, இந்தியாவின்
தலைசிறந்த படமாக இருக்கும்.
கேள்வு: உங்கள் பூர்வீக மாவட்டம் கிருஷ்ணகிரியில்
உங்கள் தாய் தந்தைக்கு நினைவிடம் அமைப்பீர்களா?
ரஜினி: இதைக் கேட்டதும் ஒரு நிமிடம் ரசிகர்களை
புன்முபறுவலுடன் பார்த்த ரஜினி, இந்தக் கேள்வியைக் கேட்ட
ரசிகர் யார் எனக் கேட்க, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கார்த்திக்
என்ற ரசிகர் எழுந்து கைத் தூக்கினார். அவரைப் பாராட்டினார்
ரஜினி) ரு நல்ல விஷயத்தைக் கூறினீர்கள். அது பற்றி
யோசிப்பேன்.
கேள்வி: குசேலன் தோல்வி ஏன்? படத்துக்கு நீங்கள்
ரூ.25 கோடி வாங்கியதாகக் கூறுகிறார்களே?
பதில்: அந்தப் பட பூஜையின்போதே அதில் என் பங்கு என்ன என்று
கூறிவிட்டேன். இயக்குநர் வாசுதான் என் போர்ஷனை
அதிகப்படுத்தார். தெலுங்கு உரிமை கொடுக்க வேண்டாம், நாமே
ரிலீஸ் பண்ணலாம் என்றேன். கேட்கவில்லை,
கொடுத்துவிட்டார்கள்.ரூ.60 கோடிக்கு விற்காதீர்கள் என்றேன்.
அதையும் மீறி விற்றார்கள். இதில் என் தப்பு என்ன? இந்தப்
படத்துக்கு நான் ரூ.25 கோடி வாங்கியதாகக் கூறுவதும் தவறு.
கே: முதலில்
ராகவேந்திரரை வழிபட்டீர்கள். பிறகு அருணாச்சலேஸ்வரர்
என்றீர்கள். பாபாஜி என்றீர்கள். அடிப்படையில் உங்களுக்கே
தெளிவான பார்வையில்லையா?
ரஜினி: (சிரிக்கிறார்... சிறிது நேரம் யோசித்தவர்)
இந்துவிலிருந்து முஸ்லீம், முஸ்லீம் இருந்து கிறிஸ்துவம்
என்று மாறினால்தான் தவறு. அது கூட தவறு என்று சொல்ல முடியாது.
நமது பாடத்திட்டத்திலேயே கூட வரலாறு, புவியியல், கணிதம் என்று
பல படிப்புகள் உள்ளன.
அவை நமது ஞானத்தை விருத்தி செய்கிறது அது போன்று தான் தேடல்
நிறைந்த உள்ளம் நமது ஆன்ம ஞானத்தை விருத்தி செய்கிறது. இதில்
தவறும் ஒன்றும் கிடையாது. எனக்கு விருப்பமானவர்களைப்
பின்பற்றுகிறார்கள்.
என் ரசிகர்களைப் பற்றி மக்களிடம்
கேளுங்கள்!
கே: நீண்ட காலம் மன்றப்
பணிகள் செய்து வரும் ரசிகர்களை பற்றி உங்கள் கருத்து?
ரஜினி: ரஜினி ரசிகர்களை பற்றி நான் பேச வேண்டிய அவசியம்
கிடையாது. நாட்டு மக்களுக்கே தெரியும். இதை மற்றவர்களிடம்
கேளுங்கள்.
கே: உங்களைக் குழப்பவாதி
என்று சில பத்திரிக்கைகளில் எழுதும்போது அதை கேட்கவும்,
படிக்கவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்கு ஏன் நீங்கள் இடம்
கொடுக்கிறீர்கள்.
ரஜினி: பத்திரிக்கைக்காரர்களை வைத்துக் கொண்டே இந்த கேள்வியை
கேட்டால் எப்படி. சில நேரங்களில் நான் செய்வது கூட
அப்படித்தான் இருக்கிறது. எல்லாம் அனுபவத்தில் இருந்து
கற்றுக் கொள்வதுதான். இது செய்தால், இது நடக்கும் என யூகித்து
செய்வதில்லை.
நாம் நினைப்பது சரி எனும்போது பேசி விடுகிறேன். வேறு
கோணத்தில் பார்க்கிறவனுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். அது
தவிர்க்க முடியாது. குழப்பவாதி என்று சொல்லலாம். சுயநலத்தோடு
எதையும் செய்ய மாட்டேன். எது சரி என்று படுகிறதோ அதைத்தான்
செய்வேன்.
சில செய்திகளை படிக்கும் போது சிரிப்பாக இருக்கும். சில
சிந்திக்க வைக்க செய்யும். சமீபத்தில் நான் வெளியிட்ட
அறிக்கையை பற்றிக்கூட குழப்பவாதி என்று கூறினார்கள். அன்று
நான் அந்த முடிவு எடுக்காவிட்டால் நாட்டில் எத்தகைய
குழப்பங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள
முடியும்.
மற்றவர்களுக்காக விட்டுக் கொடுத்து சில நேரத்தில் கெட்ட பெயர்
எடுத்துள்ளேன். இப்போது அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள்.
நானும் அமைதியாக இருக்கிறேன்.
ஒகேனக்கல் வருத்தம் ஏன்?
கே: ஒகேனக்கல் விவகாரத்தில்
மன்னிப்பு கேட்டதாகவும், வருத்தம் தெரிவித்ததாகவும் செய்திகள்
வெளியானது. உண்மையில் நடந்தது என்ன? உங்கள் வாயால்
சொல்லுங்கள்.
ரஜினி:
(சிரித்துக்கொண்டே) முன்னாலே முன்னாலே போகனும் என்று நான்
நினைக்கிறேன். நீங்கள் பின்னாலே பின்னாலே போகனும்
என்கிறீர்கள். விஷயம் நடந்தது முடிந்தது. விட்ருங்க. அதிலேயே
இருந்தால் எப்படி... முதல்ல ஒரு விஷயம் தெரிஞஞ்சுக்கங்க...
நான் ஒருபோதும் யாரிடமும் மன்னிப்புக் கேட்கவில்லை. அதுக்கான
அவசியமும் எனக்கில்லை. வருத்தம்தான் தெரிவித்தேன்.
முதலில் ஒகேனக்கல் பிரச்சனை சினிமா
சம்பந்தப்பட்டது அல்ல. ஆனால் கர்நாடகாவில் எந்த
பிரச்சனையானாலும் தியேட்டரைத்தான் முதலில் அடிப்பார்கள்.
காரணம் பெங்களூர்ல தமிழ்ப் படங்கள்தான் நல்லா ஓடும்.
பெரும்பாலும் கன்னடக்காரர்கள் பார்ப்பதும் தமிழ்ப்படம்தான்.
அதுல அவங்களுக்கு பிடிக்கல. அது தமிழர்களோட திறமை. திறமை
எங்கும் ஜெயிக்கும்.
ஆனா, அவங்க இதுக்காக தேவையில்லாம
தியேட்டர்களை அடிக்கறதும் சினிமாவை நிறுத்தறதும் தப்பு.
அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகத்தான் அந்த கூட்டத்தில்
நான் அமர்ந்தேன்.
அங்கு பேசியவர்கள் எப்படி பேசினார்கள் என்று உங்களுக்கு
தெரியும். அதில் எனக்கு சிறிது கோபம் ஏற்பட்டது. நானும்
மனிதன்தானே... அப்போது உணர்ச்சி வசப்பட்டு உதைக்கனும் என்று
கூறிவிட்டேன். என்ன இருந்தாலும் அது தவறுதானே. நான் அப்படிப்
பேசியது நாகரீகமல்ல.
தண்ணீர் கொடுக்க மறுப்பவர்களை, தியேட்டர்களை அடித்து
நொறுக்குபவர்களை உதைக்க வேண்டும் என்று கூறி இருந்தால்
பிரச்சனை முடிந்திருக்கும். அப்போது குசேலன் ரிலீசாகும் சமயம்
கர்நாடகா விநியோகஸ்தர்கள் என்னைச் சந்தித்தார்கள். எடியூரப்பா
தியேட்டருக்கு பாதுகாப்பு தருவதாக கூறினார். ரசிர்கள் கத்தி,
கபடாவோடு நாங்களும் தயார் என்றார்கள்.
ஒரு பிரச்சனை ஆரம்பித்தால் உடனே முடிய வேண்டும்.
இழுத்தடிக்கக் கூடாது. அதனால் பொது நலத்திற்காக, மற்றவர்கள்
நலனுக்காக நான் வருத்தம் தெரிவிச்சிக்கிட்டேன். சத்தியமாக
மன்னிப்புக் கேட்கவில்லை.
கடமையைச் செய் பலனை எதிர்பார்!
இங்க பாருங்க... மீண்டும் மீண்டும் நான் சொல்றதெல்லாம்
குடும்பத்தை கவனியுங்கள் என்ற முக்கியமான விஷயத்தைத்தான்.
நான் என் மனைவிக்கு நல்ல கணவனாக, என் குழந்தைகளுக்கு நல்ல
தகப்பனாக, தயாரிப்பாளர்களுக்கு நல்ல நடிகனாக என்று என்
கடமைகளை சரியாக செய்து வருகிறேன்.
நீங்களும் உங்கள் கடமையைச் செய்யுங்கள்.
கடமையைச் செய். பலனை எதிர்பார் இதுதான் நமது தத்துவம்.
அரசியலைப் பொறுத்தவரை ஒருவர் வெற்றி பெறுகிறார்கள் என்றால்,
அது திறமையாலோ, புத்திசாலித் தனத்தாலோ, உழைப்பாலோ என்று
கூறினால் அது முட்டாள் தனம்.
சந்தர்ப்பம், சூழ்நிலை, நேரம் ஆகியவை தான் ஒருவரின்
வெற்றிக்கு மிகப் பெரிய பங்களிப்பாக இருக்கிறது. சரியில்லாத
நேரத்தில் நீங்கள் குட்டிகரணம் அடித்தால் கூட ஒன்றும் செய்ய
முடியாது. 1996-ம் ஆண்டு இருந்த நிலைமை வேறு. அன்று நான்
பதவியில் போய் அமர வேண்டியதுதான் பாக்கி. அப்படி ஒரு சூழ்நிலை
இருந்தது. ஆனால் யாரோ ஜெயித்து அதை நாம் அனுபவிப்பதா...
நமக்கு ஒரு விஷயத்தில் திறமை இருக்க வேண்டும். அனுபவம்
இருக்க வேண்டும். அதை நாம் செய்ய வேண்டும். தெரியாமல் ஒரு
விஷயத்தை செய்யக் கூடாது.
என் சிறு வயதில் பணக் கஷ்டத்தில் இருந்த போது கூட சினிமா
பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முறைப்படி 2 வருடம்
பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த பிறகு தான் நடிக்க வந்தேன்.
தெரியாத ஒரு விஷயத்தை செய்ய மாட்டேன்.
பலவந்தமாக திருமணம் செய்தால் அந்த வாழ்க்கை நடக்குமா? ஈடுபாடு
இருந்தால் தான் இனிமையாக இருக்கம். ஒரு வேளை ஆண்டவன் சொன்னால்
நாளைக்கே நடக்கலாம். தொடர்ந்து நாட்டில் நடப்பதை
கண்காணித்துக் கொண்டே வாருங்கள்.
தற்போது நாடு சரியில்லை. தமிழ்நாடு மட்டும் அல்ல. ஒட்டுமொத்த
இந்தியா முழுக்கவே அப்படித்தான் இருக்கிறது. பார்க்கலாம்
ஆண்டவன் இருக்கிறான், என்றார் ரஜினி.
பின்னர் ரசிகர்களிடம் விடைபெற்றுக் கொண்ட ரஜினி, மதிய உணவு
அருந்திவிட்டுச் செல்லுமாறு எல்லோரையும் கேட்டுக் கொண்டார்.
ரஜினியின் இந்த சந்திப்பைக் கவரேஜ் செய்ய 200-க்கும்
மேற்பட்ட புகைப்படக்காரர்கள், நிருபர்கள், தொலைக்காட்சி
குழுவினர் ராகவேந்திரா மண்டபத்தில் குழுமியிருந்தனர்.
-சங்கநாதன்
|