2008 ஆம் ஆண்டுக்கு பிறகு அதாவது கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு ரசிகர்களை சூப்பர் ஸ்டார் ரஜினி இன்று சந்தித்தார் தனித் தனியாக அல்லாமல்…. வீட்டின் முன் ஒரு சிறு மேடை அமைக்கப்பட்டு அதில் தோன்றி ரசிகர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்ட அவர் அவர்களுக்கு வணக்கமும் நன்றியும் தெரிவித்தார்.
12.12.12. என்ற விசேஷ தினத்தில் வருவதால் முன்னெப்போதையும் விட இந்த பிறந்த நாள் மிகவும் பரபரப்பான ஒன்றாக மாறிவிட்டது.
பொதுவாக பிறந்த நாள் அன்று ரசிகர்களை ரஜினி சந்திப்பதை தவிர்த்துவிடுவார். ஏனெனில் இது ஒரு வழக்கமாக மாறும்பொழுது, ரசிகர்கள் இதன் பொருட்டு பணம் செலவு செய்துகொண்டு வஎ வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து வருவதை அவர் விரும்புவதில்லை.
ஆனால் இன்றைக்கு ரசிகர்களின் அன்புப் பிடி மற்றும் ஊடகங்களின் அதீத எதிர்பார்ப்பு இவற்றுக்கு முன்னர் அவர் ஒன்றும் செய்ய இயலவில்லை.
சென்னை போயஸ்கார்டனில் உள்ள வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. தனது படங்கள் ரிலீசாகும் போதெல்லாம் ரசிகர்களை ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு வர வைத்து சந்தித்து பேசுவதை ரஜினி வழக்கமாக வைத்து இருந்தார். ஆனால் கடந்த சில வருடங்களாக இச்சந்திப்பு நடக்கவில்லை. இதனால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர்.
ரஜினிக்கு கடிதங்கள் அனுப்பி அழைத்து பேசும் படி கோரி வந்தார்கள். இன்று ரஜினியின் பிறந்த நாளை ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி கோலாகலமாக கொண்டாடவும் ஏற்பாடு செய்தனர். இந்த நிலையில் நேற்று மாலை ரஜினி வீட்டில் இருந்து அவர்களுக்கு இனிப்பான தகவல் வந்தது. மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் நாளை காலை 9 மணிக்கு தலைவர் வீட்டுக்கு வர வேண்டும். உங்களை நேரில் சந்திக்கிறார் என்று போனில் பேசிய உதவியாளர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து இன்று அதிகாலையிலேயே ரசிகர்கள் ரஜினி வீட்டில் திரண்டார்கள். காலை 9 மணிக்கு ரஜினி வீட்டை விட்டு வெளியே வந்தார். கூடி நின்ற ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் வாழ்க. தலைவர் ரஜினி வாழ்க என கோஷம் எழுப்பினர். ரஜினி வெள்ளை நிறத்தில் சாதாரண வேட்டி- சட்டை அணிந்து இருந்தார். ரசிகர்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்து கும்பிட்டார்.
ரசிகர்கள் சிலர் ரஜினி காலில் விழுந்து கும்பிட முயற்சித்தனர். அவர்களை காலில் விழக்கூடாது என்று சொல்லி தடுத்தார். ஐந்து நிமிடம் வீட்டுக்கு வெளியில் வாசலிலேயே நின்று ரசிகர்கள் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். பின்னர் ரசிகர்கள் மத்தியில் மைக்கில் ரஜினி பேசியதாவது:-
(ரசிகர்களிடம் ரஜினி அவர்கள் உரையாற்றியது நமது தளத்தில் அடிக்கடி நாம் குறிப்பிடுவது தான். படியுங்கள் நீங்களே புரிந்துகொள்வீர்கள்.)
ரசிகர்கள் எல்லோரும் நேரில் வந்து வாழ்த்தி இருக்கீங்க. உங்க வாழ்த்துக்களை நான் மனதார ஏற்றுக் கொள்கிறேன். யாரும் சத்தம் போடாதீங்க. கலாட்டா பண்ணக் கூடாது. இது செக்யூரிட்டி ஏரியா. இங்கு உங்களை அனுமதித்ததே பெரிய விஷயம். சத்தம் போடதீங்க. உங்களையெல்லாம் பார்த்தது எனக்கு ரொம்ப சந்தோஷம். இவ்வாறு ரஜினி பேசி விட்டு வீட்டுக்குள் சென்றார்.
பின்னர் வீட்டிற்குள் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரசிகர்கள் எதையும் பாசிடிவான எண்ணத்துடன் அணுகவேண்டும் என்றும் தன்னுடைய பிறந்தநாளான இன்று அனைவரும் அவரவர் பெற்றோரை மதித்து அவர்களை வணங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
‘கோச்சடையான்’ திரைப்படம் ஒருவேளை வெற்றிபெற்றால் பொன்னியின் செல்வன், மகாபாரதம் உள்ளிட்ட படங்களை வரலாற்று நூல்களை படமாக்கும் என்னமிருப்பதாக கூறினார்.
முன்னதாக இன்றைக்கு வெளியான அனைத்து நாளிதழ்கள் மற்றும் பத்திரிக்கைகளில் ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு விசேஷ கவரேஜ் அளிக்கப்பட்டிருந்தது.
ரசிகர்கள் திகட்ட திகட்ட விருந்து கிடைத்த திருப்தியில் திளைத்தனர்.
தவிர சிவாஜி 3D திரைப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக புதிய படங்களுக்கு சவால் விடும் வகையில் ஓடிக்கொண்டிருப்பது ரசிகர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
|