கண்டவர் விண்டிலர்... விண்டவர் கண்டிலர் என்று ஒரு சொலவடை சொல்வார்கள் சிவனடியார்கள்.
ரஜினி பற்றிய உண்மைகள் அல்லது வதந்திகள் இரண்டுக்குமே இது சாலப் பொருந்தும்.
ரஜினி தமிழ்நாட்டில் சம்பாதித்து கர்நாடகத்தில் முதலீடு செய்கிறார் என்று நீண்ட காலமாகவே சொல்கிறார்கள்... சொல்கிறார்கள்... சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
அரைகுறை பத்திரிகை நிருபர்கள் முதல் மெத்தப் படித்த அஞ்ஞானிகள் வரை இதே புலம்பல்தான்.
அட உண்மையாகத்தான் இருக்குமோ... என்ற ஒரு மயக்கத்தில் நானும் ஒசூர் எல்லையிலிருந்து மைசூர், ஹம்பி வரை நெடுஞ்சாலை, குறுஞ்சாலை எல்லாம் ஒரு வார பயணம் கூட செய்து பார்த்துவிட்டேன். இதில் நமக்குத் தெரிந்த உண்மை ஒனறுதான், பெங்களூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிறைய சொத்து வைத்திருக்கும் விஐபிக்களில் நிறையப் பேர் தமிழர்கள் என்பதே அது!
அவர்களில் சிலரது பெயரை இங்கே வெளியிடுவதில் நமக்கு எந்த பயமும் இல்லை.
கோவையைச் சேர்ந்த பெரும் தொழ்லதிபர்கள் இருவருக்கு இந்தப் பகுதிகளில் உள்ள சொத்துக்களின் மதிப்பு மட்டும் ரூ.2000 கோடியைத் தாண்டுகிறது.
மைசூர், ஹாசன், மங்களூரிலெல்லாம் இவர்களுக்குச் சொத்துக்கள் உள்ளன. கூர்க், ஷிமோகா பகுதிகளில்கூட சொத்துக்கள் வைத்துள்ளனர் சில தமிழர்கள்.
பெங்களூரிலிருந்து ஹாசன் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ரஜினிக்கு பல பேக்டரிகள், சந்தன எண்ணெய் ஆலைகள் இருப்பதாக பலர் கூறிய வண்ணம் உள்ளனர். நாம் விசாரித்தவரையில் ரஜினி நேரடியாகத் தொடர்புடைய எந்த ஆலையும், அலுவலகமும் அங்கில்லை என்பதே உண்மை.
வேண்டுமானால் சில தொழில்களில் பங்குதாரராக இருக்கலாம். அதுகூட நமது யூகம்தான். ஆனால் பங்குதாரர் ஆவது அத்தனை பெரிய பாவ காரியம் அல்ல. அது ஒரு சாதாரண விஷயம். ஒரு லட்ச ரூபாய் இருந்தால் நீங்களும்கூட கர்நாடகத்தில் பிரபலமாயிருக்கும் பல கம்பெனியின் ஷேர்களை வாங்கி பங்குதாரராகி விட முடியும்.
சில இடங்களில் ரஜினி நிலம் வாங்கியிருப்பதாகக் கூறுகிறார்கள். கர்நாடகத்தில் சரத்குமாருக்கு இல்லாத நிலமா!
பெங்களூர் போனால் இப்போதும் ரஜினி தங்குவது இந்திரா நகரில் உள்ள ஒரு சாதாரண பிளாட்டில்தான். அங்கு ரஜினிக்கு துணை ஒரேயொரு உதவியாளர். ரஜினி இங்கு வருவதும் போவதும்கூடத் தெரியாது என்கிறார்கள் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள்.
ஆனால் ரஜினி தான் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை தமிழகத்தில்தான் முதலீடு செய்துள்ளார். ஆனால் அவை எல்லாமே மிக நாணயமான முதலீடுகள் என்பதைத் தெரிந்து கொண்டால் போதும், பொது வாழ்க்கைக்கு அவர் எந்த அளவுக்குத் தகுதியானவர் என்பதைப் புரிந்து கொள்ள...
அதெல்லாம் கிடக்கட்டும்...
ரஜினி அங்கே நிலம் வாங்கினார்... இங்கே இடம் வாங்கினார்... அவர் பதிவு அலுவலகம் போகாமல் வீட்டிலிருந்தபடியே பத்திரப் பதிவு செய்தார் என்றெல்லாம் டெஸ்க் ஒர்க் செய்யும் புலனாய்வுப் புலிகள், கர்நாடகத்தில் ரஜினிக்குச் சொந்தமான ஏதாவது ஒரு தொழிற்சாலைக்காவது ஆதாரம் தந்திருக்கிறார்களா...
உண்மையில் அப்படி ரஜினிக்கு கர்நாடகம் முழுக்க சொத்துக்கள் இருந்திருந்தால், பேனைப் பெருமாளாக்கும் கலையில் வித்தகர்களான இவர்கள் எப்படியெல்லாம் எழுதிக் கிழித்திருப்பார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்.
ஒரு இந்தியன் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சொத்து வாங்கலாம் (காஷ்மீர் தவிர- அதைக் கேட்க ஒரு பயலுக்கும் துப்பில்லை!). சட்டம் அதனை அனுமதிக்கிறது. அந்த சட்டத்தை வைத்துக் கொண்டுதான் தமிழ் பணக்காரர்கள் மற்ற மாநிலங்களில் சொத்து வாங்கிக் குவிக்கிறார்கள். ஆனால் ரஜினி மட்டும் தமிழ்நாட்டு பார்டரைத் தாண்டக்கூடாது...
நல்ல நியாயம்...
இதுவல்லவா வந்தாரை வாழவைத்துக் கிழித்த உத்தம தமிழ்க் குணம்!
By Vinojasan
|