ரஜினி ரசிகர்கள் பக்கம் கொஞ்சம் வருவோம் !!!
25/08/20 காலை முதலே முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி "அண்ணாமலை" அவர்கள் பாஜகவில் இணையப் போகிறார் என்ற தகவல் பரபரப்பைக் கிளப்பியது.
பொதுவாக பல டுபாக்கூர் ஊடகங்கள் investigative journalism என்ற பெயரில் வாய்க்கு வந்ததை எல்லாம் அடித்து வீட்டுக் கொண்டு இருந்தார்கள். அது போல அண்ணாமலையை பாஜகவுடன் தொடர்பு படுத்தி பேசி வந்தது மட்டும் இல்லாமல், அவர் தான் ரஜினியின் முதல்வர் வேட்பாளர் என்றும் கற்பனை கதைகளைக் கட்டவிழ்த்து விட்டார்கள்.
10 விஷயத்தை அடிச்சி விட்டால் ஒன்று சரியாக போகும் அல்லவா. அது போல தான் அண்ணாமலை பாஜகவின் இணைப்பு நடந்துள்ளது. ஆனால் இந்த டுபாக்கூர் ஊடகங்கள் செய்தது என்ன ?
பாஜகவில் இணைகிறார் ரஜினியின் முதல்வர் வேட்பாளர் என்றெல்லாம் தலைப்பு வைத்துள்ளார்கள். RS பாரதி இவர்களை திட்டியது தப்பே இல்லை என்று தோன்ற வைக்கும் செயல் இது.
அண்ணாமலை தான் என்னுடைய முதல்வர் வேட்பாளர் என ரஜினி சொன்னாரா ? இல்லை.
நான் ரஜினி கட்சியில் இணைகிறேன் என அண்ணாமலை சொன்னாரா ? இல்லை.
சம்மந்தப்பட்ட இருவரும் அதை பற்றி கருத்துக் கூறாத போது உங்கள் கற்பனை வளத்திற்கு யார் பொறுப்பு ?
ஒரு முரட்டுத்தனமான உடான்ஸ் பிறப்பு சொல்கிறது… ரஜினியை அண்ணாமலை பார்த்துட்டு வந்தார், அதனால் ரஜினியும் பாஜகவின் ஆளு தான் என்று !!!
அப்போ மோடி கூட தான் கலைஞரை வீடு தேடி வந்து பார்த்தாரு… அவரையும் பாஜக உறுப்பினர் ஆக்கிடலாமா ?
அண்ணாமலை ரஜினியை பிடிக்கும் என்று கூறி இருந்தாரே ?? அப்போ ரஜினியும் பாஜகன்னு தானே அர்த்தம்?
உதயநிதி கூட தான் ரஜினியோட படத்தை போட்டி போட்டு விநியோகிக்கும் உரிமை வாங்குறாரு…. அப்போ ரஜினி திமுகவா ??
ரஜினி அரசியலுக்கு வரட்டும், அவர் என்ன சொல்ல வருகிறார் என்று பாப்போம், அப்புறம் கருத்து சொல்கிறேன் என்று ஆதரவான தொனியில் கூறினாரே அண்ணாமலை ?? அப்போ ரஜினி பாஜக தானே ????
ரஜினி வரட்டும், அவர் கருத்துகளை கூறட்டும், அப்பறம் நான் கருத்து சொல்கிறான் என்று ஸ்டாலின் கூட கூறி உள்ளார்… அப்போ ஸ்டாலின் திமுகவா இல்லை ரஜினி ஆதரவாளரா ?
அதெல்லாம் இருக்கட்டும்… அண்ணாமலை தான் ரஜினியின் முதல்வர் வேட்பாளர் என்று யார் கூறினார் ???? நாங்களே சொல்லிகிட்டோம் !!! அவ்வளவு தானே…. இதுல அறம் புறம் முரம்ன்னு வியாக்கியானம் வேற.
இப்போது ரஜினி ரசிகர்களின் பக்கம் வருவோம்…
பலர் அண்ணாமலை அவர்களை வெளிப்படையாக ஆதரித்தனர் .
அண்ணாமலை உண்மையில் ஒரு சிறந்த அதிகாரியாக பணிபுரிந்துள்ளார். ஒரு அரசு பணியாளராக முன்னர் இருந்த நிர்வாகத்தை விட மோடி சிறந்த நிர்வாகத்தை தருவதாக தன்னுடைய அனுபவத்தில் சொல்கிறார். அரசு பணியாளராக தான் கொண்டு வர நினைக்கும் மாற்றத்தை ஒரு அரசியல்வாதியாக சுலபமாக கொண்டு வர முடியும் என்று நினைக்கிறார்…
ஒரு அரசு பொறுப்பில் இருந்துக் கொண்டு ஆளும் கட்சிக்கு சாதகமாக அவர் செயல்பட்டு இருந்தால் அது தவறு. ஆனால் அவர் பொறுப்பாக பதவியை துறந்து இதை செய்துள்ளார். அது வரை சந்தோசமே.
ஒரு நல்லவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று சொல்லும் நாம், படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று தலைவர் ரஜினிகாந்த் கூறியதை வரவேற்கும் நாம், நிச்சயமாக கர்நாடக சிங்கம் என்று அழைக்கப்பட்ட ஒரு துடிப்புள்ள அதிகாரி அரசியலுக்குள் அதிகாரப்பூர்வமாக வருவதை நிச்சயம் வரவேற்க வேண்டும்.
அவர் எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் போகட்டும். ஆனால் ரஜினி அவர்கள் சொன்ன மாற்றம் நிகழ துவங்கி உள்ளது. மாற்றுக்கட்சியில் உள்ள நல்லவர்களுக்கு என் கட்சியில் இடம் கொடுப்பேன் என்று ரஜினியும் கூறி உள்ளார்… சித்தாந்தங்களை தாண்டி நல்லவர்கள் பலர் இந்தியாவில் பல கட்சிகளில் உள்ளனர்.
இங்கே நாம் கோவம் கொள்ள வேண்டியது சிலர் மீது தான். தாங்கள் ஏதோ ரஜினியின் ஆஸ்தான செய்தி தொடர்பாளர் போல காட்டிக்கொள்ள நினைக்கும் சிலர், தங்களுக்கு எல்லாம் தெரியும் என்பதை போல குறிப்புகளை போல கீச்சுகளை (ட்வீட்) பதிவிடுவதெல்லாம் தடுக்கப்பட வேண்டும்.
தன்னுடைய இமேஜை வளர்த்துக்கொள்ள ரஜினியை பற்றி எல்லாம் எனக்கு தெரியும் என காட்டிக்கொள்வதில் சிலர் முனைப்பாகஇருக்கிறார்கள். இதில் தலைவரே நேரடியாக தலையிட்டு முளையிலேயே கிள்ளி ஏறிய வேண்டும் என்பது தான் ஒரு சாதாரண ரசிகனின் விருப்பம்.
ரஜினி சொன்னதை போல மாற்றுக்கட்சியில் இருந்து வரப்போகும் நல்லவர்களின் பட்டியலில் ஒரு வேளை அண்ணாமலையின் பெயர் இருந்தாலும் ரஜினி ரசிகர்கள் ஆதரிப்பார்கள். காரணம் நான் பதவிகளை கலைபேன் என்று கூறியவுடன் கைத் தட்டியவர்கள் அவர்கள் !!!
நாளை ரஜினி அண்ணாமலையை கைக் காட்டினாலோ, வேறொருவரை காட்டினாலோ அவர்கள் முழுமையாக ஆதரிப்பார்கள். காரணம் ரஜினிக்கு தான் மரியாதையே தவிர வேறு எவருக்கும் இல்லை.
ரஜினி கூறிய அதே வார்த்தைகளை தான் நானும் கூற விரும்புகிறேன்…. இறைவா நண்பர்களிடம் இருந்து என்னைக் காப்பாற்று…. எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்.
- விக்னேஷ் செல்வராஜ்.
|