எல்லாருக்கும்
நல்லவராய் இருந்து விடுவோம்... இதனால் யாருக்கும் இழப்பில்லை எனும்
தத்துவத்தின்படி வாழ்ந்தவர் குன்னக்குடி வைத்தியநாதன்.
இப்படி வாழ்வதில் உள்ள ஒரே சிக்கல் பலரது கேலி கிண்டலுக்கு ஆளாக
வேண்டி வரும். ஆனாலும் அவற்றைச் சகித்துக்கொண்டால் உலகுக்குப்
பயன்படும் வாழ்வை வாழ முடியும்.அப்படி ஒரு
வாழ்க்கை வாழ்ந்தவர் குன்னக்குடி. வாழும்போது குறையில்லாத மனிதன்
யார். மகாத்மாவையும் குறைகூறிய முன்னோர்களைக் கொண்டதுதான் நமது
பாரம்பர்யம். இதில் குன்னக்குடியெல்லாம் எம்மாத்திரம்!
கர்நாடக சங்கீதம் மேட்டுக் குடிகளுக்கானது என வேதம் படித்தவர்கள்
வியாக்கியானம் பண்ணிக்கொண்டிருக்கையில், கீழ்மட்ட ரசிகன் வரை அதைக்
கொண்டுபோய், அவர்களின் விசில் சத்தத்தையும் பரிசாகப் பெற்றவர்
குன்னக்குடி.
ஒரு திரைப்பட இசைக் கலைஞர் என்பதாலேயோ என்னமோ... கர்நாடக சங்கீதம்
வேறு, திரை இசை வேறு என்ற பேத்த்தை அவரால் ஒப்புக் கொள்ள
முடியவில்லை. எந்தக் கச்சேரியாக இருந்தாலும் திரைப்பாடல்களை
துக்கடாவாகவோ, மெயினாகவோ இசைத்து கூட்டத்தை வயலின் நரம்புகளில்
சிறைப்படுத்தி விடும் அரிய வித்தைக்காரர்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர அபிமானி. ரஜினி ஸ்பெஷல் பாடல்களை
மட்டுமே பல கச்சேரிகளில் அவர் வாசிக்கக் கேட்டிருக்கிறேன்.
குறிப்பாக மதுரை, கோவைக்கு வந்தால் அவர் தவறாமல் எம்ஜிஆர், ரஜினி
பாடல்களை வாசித்துக் காட்டி ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில்
மூழ்கடித்துவிடுவார்.
வயலினுக்கு இன்னொரு அரத்தம் குன்னக்குடி என்று உலகைச் சொல்ல வைப்பது
எத்தனை பெரிய சாதனை...
அவரது இசையை ரசித்தவர்கள் என்ற முறையில் நமது மரியாதையைச்
செலுத்துவோம், மவுனமாய்!
-Vinojasan