ரஜினியை ‘தலைவர்’ என்று அஜீத் குறிப்பிட்டதை சில தினங்களுக்கு முன் இங்கே எழுதியிருந்தேன்.
உடனே அதற்கு ஒருவர், ‘அஜீத் ஒரு போதும் யாரையும் தலைவர் என்று அழைக்க மாட்டார்... சார் அல்லது மிஸ்டர் என்று குறிப்பிட்டுதான் அழைப்பார். நீங்களாகவே அவரது பேட்டியில் தலைவர் என்ற வார்த்தையை இடைச் செருகலாகப் பயன்படுத்தியிருக்கிறீர்கள்...’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இவரைப் போன்றவர்களுக்கு எப்படிச் சொன்னால் புரியும் என்று தெரியவில்லை... பேட்டி எடுத்தது நான்... கொடுத்தவர் அஜீத். அவர் என்ன வார்த்தைகளைப் பிரயோகித்தார் என்பதை இனி அஜீத்தே வந்து விளக்கினால்தான் நம்புவார்கள் போலிருக்கிறது..!
தலைவர் என்று யாரும் அழைத்துதான் அந்த நிலையை அடைய வேண்டிய அவசியம் ரஜினிக்கு இல்லை. அப்படியொரு அல்பத்தனம் அவரது ரசிகர்களுக்கும் இல்லை. அவரை ஏற்கெனவே கோடிக்கணக்கான ரசிகர்கள் அப்படித்தான் அழைக்கிறார்கள்.
10-ம் வகுப்பு மாணவன்கூட, 'தலைவர் படம் பார்த்தேன்...' என்று பெருமையுடன் குறிப்பிடும் உன்னத நிலையில் இருப்பவர் அவர். திரையுலகில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானோர் அவரை தலைவர் என்றுதான் உரிமையுடன் அழைக்கிறார்கள்.
எனவே எந்தவித Interpretation-ம் இல்லாமல் எழுதினாலும் கூட அவரைப் பற்றி மிகமிக உயர்வாகத்தான் எழுத முடியும்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பில்லா ரிலீசுக்கு முன் சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் 200-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர் புகைப்படக்காரர்களுக்கு மத்தியில் அஜீத் குறிப்பிட்ட வார்த்தைகள்:
'எல்லோரும் என்னைத் ‘தல’ என்கிறார்கள். ஆனால் எனக்கு தலைவர் ரஜினி சார்தான். அவர்தான் என்னோட குரு. சரியான நேரத்தில் சரியான பாதையைக் காட்டியவர்.
பில்லாவைப் பொறுத்தவரை அந்தப் படத்தின் பிள்ளையார் சுழியிலிருந்து நாளை ரிலீஸ் வரை, நம்ம தலைவரைக் கலந்து ஆலோசித்துதான் நானும், விஷ்ணுவர்தனும் செய்து வருகிறோம். அவருடைய பிறந்த நாளன்று வெளியிடத்தான் திட்டமிட்டோம். ஆனால் சார்தான் வேண்டாம் என்று கூறிவிட்டார்.
ஆடியோவைக் கூட அவர்தான் தன்னுடைய வீட்டுக்கே எங்களை வரச்சொல்லி வெளியிட்டார். யாருக்கும் கிடைக்காத பாக்கியம் அது.
நடிப்பைப் பொறுத்தவரை ரஜினி சார், கமல் சார் இருவரையுமே நான் வழிகாட்டிகளாக நினைக்கிறேன்...’
-இந்த பேட்டியை நிறையப் பேர் படித்திருப்பீர்கள். இருந்தாலும் ஒரு நினைவூட்டல் இது!
அது போகட்டும்...
தென்னிந்திய நடிகைகளின் இன்றைய தேதிக்கு நம்பர் ஒன்னாகத் திகழ்பவர் நயன்தாரா. குறுகிய காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 3 படங்களில் (சிவாஜியையும் சேர்த்து!) நடித்து விட்டவர்.
ரஜினி எனும் மாமனிதர் எப்படியெல்லாம் அவரது வாழ்க்கையில் திருப்பு முனைகளுக்கு காரணமாக அமைந்தார் என பல பேட்டிகளில் அவர் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் ஒரு பத்திரிகைப் பேட்டியிலும் ரஜினியிடமிருந்து தான் கற்றுக் கொண்ட விஷயங்கள் குறித்து பேட்டியளித்துள்ளார்.
அதிலிருந்து சில பகுதிகள்:
தலைவரிடம் நான் நிறைய நல்ல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். அவர் எந்த அட்வைஸையும் எனக்குச் சொல்லல. ஆனா அவரோட நடவடிக்கைகளிலிருந்து இதை நான் கத்துக்கிட்டேன்.
நான் தலைவர்னு சொல்றது சூப்பர் ஸ்டார் ரஜினியை!
இப்போதெல்லாம் நட்சத்திரங்களுக்கு கேரவன் எனப்படும் சொகுசு வேன் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரொம்ப அவசியமா இருக்கு. சில சமயம், அவசியம் என்பதை விட கவுரவ பிரச்சினையாவும் ஆயிடுச்சு!
முன்னெல்லாம் ஒரு ஷாட் ஓகே ஆனதும் நான் ஓடிப்போய் கேரவனில் உட்கார்ந்துக்குவேன். அடுத்த ஷாட் ரெடியானதும், அஸிஸ்டெண்ட் கூப்பிடுவார். போய் நடித்துவிட்டு மறுபடியும் கேரவனுக்குள் ஏறிடுவேன்.
ஆனால் சூப்பர் ஸ்டாராக இருந்தும் ரஜினி சார் அப்படிச் செய்ய மாட்டார். சிவாஜி, குசேலன் படப்பிடிப்புகளின்போது தலைவரின் எளிமையைப் பார்த்து வியப்பாக இருந்தது. அதோடு அவர் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்பதற்குக் காரணம் அவரது டெடிகேஷன் என்பதும் கண்கூடாக என்னால் உணர முடிந்தது.
அவருக்கான ஷாட் முடிந்துவிட்டாலும் கூட சேரைப் போட்டுக் கொண்டு செட்டிலேயே உட்கார்ந்திருப்பார், அடுத்த ஷாட்டுக்கு அழைக்கும் வரை அப்படியே உட்கார்ந்திருப்பார். டைரக்டர் வந்து, சார் அடுத்த ஷாட் ரெடியாக அரைமணி நேரமாகும்... நீங்க ரெஸ்ட் எடுக்கலாமே, என்று சொன்னால்தான் கேரவனுக்குள் போவார்.
பொசுக்கு பொசுக்குன்னு கேரவனுக்குள் போகிற எனக்கு ரஜினி சாரின் செய்கை ஆச்சர்யமாகவே இருந்தது. கூடவே, தலைவர் எளிமையா இருக்கிற மாதிரி பந்தா விடுறாரோன்னு நெனச்சேன்!
ஒரு நாள் படப்பிடிப்பின்போது சொன்னார்...
‘நடிப்புதான் நமக்கு சோறு போடுது. நடிப்பும் தொழில்தான். அதை சின்ஸியரா செய்யணும். ஒரு ஆபீஸ் வேலைக்குப் போறவன் ஒரு ஃபைலை புரட்டி கையெழுத்துப் போட்டதும் உடனே ரெஸ்ட் ரூமுக்கு ஓடிப்போய் உட்கார்ந்துட முடியுமா? காலை 9 மணியிலிருந்து 1 மணி வரைக்கும், 2 மணியிலிருந்து சாயங்காலம் 6 மணி வரைக்கும் ஒரு கால்ஷீட். இந்த கால்ஷீட் நேரம் நம்ம சொந்த நேரம் கிடையாது. நாம காசு வாங்கிட்டு, இந்த நேரத்தை அவங்களுக்குக் கொடுத்திட்டோம். அதனால அந்த நேரங்கள்ல அவங்க சவுகரியப்படிதான் நாம இருக்கணும், இதான் என் பாலிஸி,’ எனச் சொன்னார்.
எவ்வளவு பெரிய விஷயத்தை எனக்குப் புரிய வைத்திருக்கிறார்! அன்றிலிருந்து தலைவர் பாணியில் செட்டிலேயே உட்கார்ந்துவிடுவேன். அன்றிலிருந்து அத்யாவசியம் என்றாலோ... அவர்களே ரெஸ்ட் எடுக்கச் சொன்னாலோ தவிர கேரவனுக்குள் போவதே இல்லை. இந்த விஷயத்தில் என் வழி... தலைவர் வழி!!
-Sanganathan
www.rajinifans.com
|