இங்கு இடம்பெற்றிருக்கும் அசத்தலான புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது தெரியுமா?
சத்யா மூவீஸின் தயாரிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான ‘பணக்காரன்’ படத்தின் வெளிவிழாவும், சத்யா மூவீஸ் நிறுவனத்தின் வெள்ளி விழாவும் ஒன்றாக நடைபெற்றது. வடபழனியில் உள்ள விஜய சேஷ மஹாலில் செப்டம்பர் மாதம் 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த விழாவிற்கு சூப்பர் ஆக்டர் கமலும் சூப்பர் ஸ்டார் ரஜினியும் வந்திருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.
அப்போதெல்லாம் சூப்பர் ஸ்டார் வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு படங்கள் நடிப்பார். ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறையும் அவரது படம் வெளியாகும். ஆகவே, அந்தந்த படங்களின் துவக்க விழா, ஆடியோ வெளியீட்டு விழா, வெற்றி விழா, என படம் சார்ந்த பொது நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்வார். ஒவ்வொரு முறையும் அசத்தலாக டிரஸ் அணிந்து வருவார். பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கும். 90 களின் கடைசியில் படங்களை குறைத்துக்கொண்டார். அவர் பொது நிகழ்ச்சிகளுக்கு வெளியே வருவதும் குறைந்துபோனது.
எம்.ஜி.ஆர். அவர்களால் தொடங்கப்பட்டது ‘சத்யா மூவீஸ்’ நிறுவனம். எம்.ஜி.ஆர். நடித்த தெய்வத்தாய், ரிக்ஷாக்காரன், காவல்காரன் உள்ளிட்ட படங்களையும், சூப்பர் ஸ்டாரை வைத்து ராணுவ வீரன், மூன்று முகம், பணக்காரன், பாட்ஷா உள்ளிட்ட படங்களும் சத்யா மூவீசால் தயாரிக்கப்பட்டது. எம்.ஜி.ஆருக்கு அடுத்து சத்யா மூவீஸில் அதிக படங்கள் நடித்தவர் நம் சூப்பர் ஸ்டார் தான்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கேடயத்தை பரிசு வழங்கியது யார் தெரியுமா? அண்ணாமலை பல்கலைக்கழக வேந்தர் தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி.
இயக்குனர் பாலச்சந்தர், ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம், நாகேஷ், சரோஜா தேவி, இளையராஜா, அப்பச்சன், ஏ.வி.எம்.சரவணன், பஞ்சு அருணாச்சலம், தயாரிப்பாளர் ஜி.வி., இயக்குனர் பி.வாசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர், ரஜினி, கமல் இருவரையும் “என் நண்பர்கள்” என்று அழைத்தார். “அவர்கள் இருவரும் இப்போது வளர்ந்துவிட்ட கலைஞர்கள். அவர்களை நான் அப்படித்தான் அழைக்க விரும்புகிறேன். அதை அவர்கள் ஏற்றுக்கொண்டாலும் சரி… ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி…” என்று பேசி பரபரப்புக்கு வித்திட்டார்.
அடுத்து பேசிய கமல், சூப்பர் ஸ்டாரை அன்புச் சகோதரர் என்று அழைத்தார்.
விழாவில் சூப்பர் ஸ்டார் பேசியது தான் ஹைலைட். விழாவிற்கு வருகை தந்த ஒவ்வொருவராக குறிப்பிட்டு வரவேற்றார். அனைவருக்கும் வணக்கம் கூறிய பின்னர் சூப்பர் ஸ்டார் பேசியதாவது : “இயக்குனர் சிகரம் என் குருநாதர் கே.பாலச்சந்தர் அவர்கள் என்னையும் சகோதரர் கமல் அவர்களையும் “நண்பர்கள்” என்றார். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் எந்தளவு உயரே போனாலும், அவர் என்றைக்கும் எங்கள் குரு தான். அவர் தான் எங்களுக்கு ஆசான்”. என்றார். (பலத்த கைத்தட்டல்).
என் ரசிகர்கள் எனக்கு யார்?
‘பணக்காரன்’ படத்தின் வெற்றியை கொண்டாடும் இந்த நன்னாளில் என் ரசிகர்களை பற்றி கூற விரும்புகிறேன். ஒரு ஊரில், குதிரையின் மீது சாமி சிலையை அமரவைத்து ஊர்வலம் போனார்களாம். அப்போது மக்கள் அனைவரும் பயபக்தியுடன் வணங்கினார்களாம். மக்கள் இப்படி விழுந்து விழுந்து வணங்குவதை கண்ட குதிரை, தன்னைத் தான் மக்கள் வணங்குவதாக னியாநித்துகொண்டு பெருமையுடன் சென்றதாம். அதைப் போல, நான் வெறும் குதிரை தான். என் மீது இருப்பவர்கள் எனதருமை ரசிகர்கள். அவர்கள் தான் என்னை ஆளாக்கியவர்கள். அவர்கள் தான் என் உயிருக்கும் மேலானவர்கள். அவர்கள் இல்லையேல் நான் இல்லை. (பலத்த கைத்தட்டல்)
(தலைவர் அப்போவே “நான் யானையில்லே குதிரை!”ன்னு சிம்பாலிக்கா சொல்லிட்டாரு)
“விஜயதசமியான இன்று ஒன்றை கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன். காலம் ரொம்ப கெட்டுப்போய்விட்டது. இளைஞர்கள் யாரையும் சார்ந்து வாழ நினைக்கக்கூடாது. தன்னைத் தானே நம்பி வாழவேண்டும். ஒவ்வொருவரும் ஒரு 10 பேரையாவது காப்பாற்றும் தகுதியை வளர்த்துக்கொள்ளவேண்டும். அப்போது தான் நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது.” - இவ்வாறு சூப்பர் ஸ்டார் பேசினார்.
சூப்பர் ஸ்டார் பேசிய பின்னர் ‘பணக்காரன்’ படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சூப்பர் ஸ்டாருக்கு எம்.ஏ.எம். ராமசாமி கேடயம் வழங்கினார். தொடர்ந்து ஆர்.எம்.வீ. அவர்களுக்கு சூப்பர் ஸ்டார் பொன்னாடை போர்த்தினார். பின்னர் சூப்பர் ஸ்டார் அவர்கள் இளையராஜா , நடிகை கவுதமி, இயக்குனர் பி.வாசு, ராதாரவி, செந்தாமரை, ஜனகராஜ், சரண்ராஜ், தமிழழகன் (மரத்தை வெச்சவன் பாடலில் ரயிலில் வரும் சாமியாராக நடித்திருப்பார். இவர் தான் அந்த பாட்டை முதலில் பாடுவார்), தியாகு, தேவி ஸ்ரீ, சத்யப்ரியா, வாலி, புளைமைப் பித்தன், பிறைசூடன், மனோ ஆகியோர்களுக்கு கேடயம் வழங்கினார்.
|